Blogger Widgets

முஸ்லிம் பெண்களிடத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.


பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகிறாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. 
ஆனால் இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்குக் காரணங்கள் பல இருந்த போதிலும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.
முதலாவதாக தொடர்பு சாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினமாக்களும், தொடர் நாடகங்களும் வானொலிகளில் 24மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மைப் பெறுகின்றன. ஒரு கலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகவே காணப்பட்டது. ஆனால் இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்குச் செல்கின்ற பெண்களைக் காண்கின்றோம்.
கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சிகள் வகித்து வருகின்றது. மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்களையும் ஆபாசப் படங்களையும் நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாகக் காணமுடிகின்றது.

வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னனியில் திகழ்கின்றனர். வானொலியை செவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான். இஸ்லாமிய நூல்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக குறைந்த வருகின்றது. பாடசாலைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்களை விடவும் காதல் கதைகளைக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும் தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்த நாள் பாடசாலை வகுப்புக்களில் நடைபெற்று வருகின்றது. சில பெண்கள் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக நடிகைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும்.
இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அந்நியப் பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் எமது அவர்களை ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

இன்னும் சிலர் தான் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்ற பெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இருக்கமாக அணிந்து வருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னுமொரு காரணமாக மேலதிக வகுப்புக்களையும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ் நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்து கொள்கின்றனர்.  அது மட்டுமன்றி இவர்களிடையே காணப்படுகின்ற செல்போன் கூட ஜாஹிலியத்தை ஊக்குவிக்கும் ஓர் அம்சமாக உருமாறிப் போனது யாரும் அறிந்த ரகசியமாய் போகின்றது.

எனவே அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. றஸ{ல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல. அத்துடன் இது முழு சமூகத்தையும் குறையாய் ஆக்கிப் போன நிறையும் அல்ல. அவர்களுக்குப் பொறுப்பாய் இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

~நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களுடைய பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குப் பொருப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள தமது குடும்பத்தினருக்குப்  பொருப்பாளர்கள். எனவே ஒவ்வொருவரும் தமது பொருப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.